சிறுமுகை அருகே ஒற்றை காட்டுயானை முகாம்: மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே ஒற்றை காட்டு யானை முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றை காட்டு யானை லிங்காபுரம் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள சாலையோரம் முகாமிட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சாலையில் வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நீண்டநேரமாக அங்கு முகாமிட்டு இருந்த காட்டு யானை அங்கு இங்கும் சுற்றி திரிந்தது. சிறிது நேரத்துக்கு பின்னர் பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு காந்தையூர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

The post சிறுமுகை அருகே ஒற்றை காட்டுயானை முகாம்: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: