கலைஞரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைப்பெறும் என கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சி துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை கல்லூரியில் 28.7.2023 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைப்பெறவுள்ளது. கீழ்கண்ட தலைப்புகளில் பேச்சு போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம். 2ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பெறும்.

மேலும், அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பெறவுள்ளது, ஆக மொத்தம் தொகை ரூ.24 ஆயிரத்திற்கு பரிசுகள் வழங்கப்பெறும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கலைஞரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: