காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

திருப்பூர் : காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் வெறிநாய்கள் கடிதத்தில் 5 ஆடுகள் பலியானது. 5க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன.திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலை, ராமபட்டினம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (40). விவசாயியான இவர் தோட்டத்தில் பட்டி அமைத்து சுமார் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சல் நிலத்தில் விட்டுவிட்டு பின்னர் மாலை வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் காலை ஆட்டுப்பட்டியை பார்க்க வந்துள்ளார். அப்போது பட்டிக்குள் 5 ஆடுகள் கொடூரமாக தாக்கப்பட்டு செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

5 ஆடுகளுக்கு மேல் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு வெறி நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வருவாய்த்துறை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபோல் கால்நடைகளை தாக்கி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: