திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையம், திருவான்மியூர் பாரதிதாசன் சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, புறநோயாளிகள் பிரிவினையும், வருகைப் பதிவேட்டினையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் அவர்கள் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவு அட்டைக்கு பதிலாக பதிவுப் புத்தமாக வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, புறநோயாளிகள் காத்திருப்பு அறையினை பார்வையிட்டு புறநோயாளிகளின் வருகையை சராசரியாக கணக்கிட்டு, கூடுதல் இருக்கைகளை அமைக்க அறிவுறுத்தினார்.

பின்னர், கர்ப்பிணித் தாய்மார்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பதிவினை நகர்ப்புர சமுதாய நல மையத்தில் பதிவு செய்து அதன் விவரத்தினை ஆரம்ப சுகாதார நிலையப் பதிவிற்கு அனுப்பி வைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு வழங்கப்படும் சிகிச்சை வழிமுறைகள் குறித்து செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், தாய் சேய் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அங்குள்ள ஆய்வகத்தினை ஆய்வு செய்து, தற்போதுள்ள உபகரணங்களின் எண்ணிக்கை, தேவைப்படும் உபகரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறும், அதன் பேரில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அங்குள்ள மருந்தகத்தினை பார்வையிட்டு அத்தியாவசியமான மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்து, காலவாதியாக உள்ள மருந்துகளை விழிப்புணர்வுடன் கையாளுமாறு மருந்தாளுனருக்கு அறிவுறுத்தினார். மேலும், சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பினை (Health Information Management System) பார்வையிட்டு நோயாளிகள் பதிவு முறை குறித்தும், அதன் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மருத்துவமனை கழிப்பறைகளை சுத்தமாக வைத்திடவும், குடிநீர் வசதியினை சிறப்புடன் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தினை தலைமைச் செயலாளர் அவர்கள் சுற்றி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பூந்தொட்டிகளில் காய்ந்த செடிகளை அகற்றி, புதிய செடிகளை நட்டு பசுமையாகவும், வளாகத்தினை சுத்தமாகவும் பராமரித்திட அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியினையும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தினையும் அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு, பணியினை தரமாகவும் விரைவாகவும் முடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், புதிய கட்டடங்கள் கட்டும் போது தேவையான திறந்தவெளி இடங்கள் குறையாத அளவிற்கு கட்ட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அங்குள்ள பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயினைப் பார்வையிட்டு அந்த இடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், குழாய்களில் உள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பணியாளர்கள் தங்கும் அறையினை மாற்றியமைக்கவும், கட்டிடக் கழிவுகள் மற்றும் உடைந்த மேசைகளை அகற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து கையாளுவது குறித்து “நமது குப்பை, நமது பொறுப்பு” என்று விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார். பின்னர் அங்குள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு, மையத்தை சுத்தமாக பராமரிக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தினார். மேலும், குழந்தைகளுடன் தலைமைச் செயலாளர் அவர்கள் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

The post திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா appeared first on Dinakaran.

Related Stories: