பிளே ஆப் சுற்றை எட்டும் 4வது அணி எது? டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று பரபரப்பான போட்டி

நெல்லை: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் நாளையோடு நிறைவு பெறுகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள், பிளேஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் நேற்று நெல்லை சங்கர்நகரில் நடந்த போட்டியில் சேலம், திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சன்னிசந்து 39 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. திண்டுக்கல் அணியின் பாபா இந்திரஜித் அபாரமாக ஆடி 83 ரன்கள் குவித்தார். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி, நேற்று தனது 6வது வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் நெல்லையில் இன்று இரவு நடக்கும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் தற்போது சேப்பாக் அணியும், மதுரை அணியும் 6 புள்ளிகளோடு சமநிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளோடு, அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு எளிதில் சென்றுவிடும். ஒருவேளை மதுரை தோற்றால், சேப்பாக், மதுரை, திருப்பூர் ஆகிய 3 அணிகளும் 6 புள்ளிகளுடன் சமநிலையை எட்டும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஏதாவது ஒரு அணி தேர்வு பெறும். எனவே நெல்லையில் நடக்கும் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

The post பிளே ஆப் சுற்றை எட்டும் 4வது அணி எது? டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று பரபரப்பான போட்டி appeared first on Dinakaran.

Related Stories: