பெரியபாளையம் அருகே மாகரல் கண்டிகையில்  பொன்னியம்மன், திரவுபதியம்மன் ஆலய திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் வழிபாடு

பெரியபாளையம், ஜூலை 4: பெரியபாளையம் அருகே மாகரல் கண்டிகை கிராமத்தில்  பொன்னியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் அடுத்த மாகரல் கண்டிகை கிராமத்தில் உள்ள  பொன்னியம்மன் மற்றும் திரவுபதி அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பொன்னியம்மன் ஆலய திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து கங்கை திரட்டல் பூங்கரகம் ஊர்வலம் கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், கும்பம் படைத்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 23ம் தேதி திரவுபதி அம்மன் கோயிலில் தர்மராஜா தூவாரோஜன் ஸ்தம்பம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து பகாசூரன் சம்ஹாரம், பாஞ்சாலி அர்ஜுனன் திருக்கல்யாணம் சீர்வரிசியோடு நடைபெற்றது. அம்மன் திருவீதி உலா நச்சுக்குழி யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை உற்சவர் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புனித நீராடிய பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் புனித நீராடி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

The post பெரியபாளையம் அருகே மாகரல் கண்டிகையில்  பொன்னியம்மன், திரவுபதியம்மன் ஆலய திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: