மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை!

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20ம் தேதி எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகாவின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மேகதாது அணைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது தமிழ்நாடு அரசு, மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமைச்சர் துரைமுருகன் செல்ல உள்ளார். மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

The post மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: