இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: ஐஎப்எஸ் தேர்வுக்கான நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in வெளியிட்டது. இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேர்ச்சி பெற்ற 147 பேரில் 101 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள் . சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் மையங்களில் படித்தவர்கள். தமிழ்நாட்டில் இருந்து 7 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் எங்கள் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களில் 5 பேர் பெண்கள். அகில இந்திய அளவில் கொல்லுரு வெங்கட ஸ்ரீகாந்த் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஷாயிஸ் போஸ்வால் 2வது இடத்தையும், லோயியா அனுஷ்கா அபிஜித் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திருச்சியை சேர்ந்த செந்தில்குமார் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 26வது இடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டில் 2வது இடத்தை கோவையை சேர்ந்த வைசாலி பிடித்துள்ளார். இவருக்கு அகில இந்திய அளவில் 37வது இடம் கிடைத்துள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு அவர்கள் பணியில் சேருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்த செந்தில்குமார் அளித்த பேட்டி: திருச்சி பெல் நிறுவத்தின் சீனியர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறேன். சிவில் சர்வீஸ் தேர்வில் எனது 6வது முயற்சி ஆகும். அது மட்டுமல்லாமல் கடைசி வாய்ப்பும் இது தான். எனக்கு படிக்கவே 2 முதல் 3 மணி நேரம் தான் கிடைத்தது. இருந்தாலும் விடா முயற்சி எடுத்து படித்து வெற்றி பெற்றுள்ளேன். மாநில அளவில் முதல் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் படித்து வந்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி: தமிழ்நாட்டில் 7 பேர் வெற்றி பெற்று சாதனை; திருச்சி மாணவர் செந்தில்குமார் முதலிடம் appeared first on Dinakaran.