ஸ்ரீகாளஹஸ்தியில் வியாபாரிகள், பொதுமக்கள் சாலை ஆக்கிரமிப்புகளை தாமாக முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி கமிஷனர் பாலாஜி நாயக் மற்றும் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ் ஆகியோர் நகர பகுதிகளில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை தாமாக முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி புதிய பேருந்து நிலைய ரவுண்டானாவில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரையிலான சாலைகளில் இருபக்கமும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சாலையோர கடைகளால் பொதுமக்கள் நடைபாதையை உபயோகிக்காமல் சாலையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வபோது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில், நகராட்சி கமிஷனர் பாலாஜி நாயக் மற்றும் இன்ஸ்பெக்டர் அஞ்சுயாதர் ஆகியோர் ஸ்ரீகாளஹஸ்தி புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் உள்பட அனைத்து சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.

அப்போது, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் சாலை ஆக்கிரமிப்பில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை அதன் உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

The post ஸ்ரீகாளஹஸ்தியில் வியாபாரிகள், பொதுமக்கள் சாலை ஆக்கிரமிப்புகளை தாமாக முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: