பக்ரீத் பண்டிகையையொட்டி புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

*5 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு ‘சேல்ஸ்’

சத்தியமங்கலம் : பக்ரீத் பண்டிகையையொட்டி புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இந்த சந்தை துவங்கிய 5 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு வியாபாரம் ஆனது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரம் தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகைக்காக பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. கர்நாடக, கேரளா மாநில வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

சந்தைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சந்தை துவங்கிய 5 மணி நேரத்தில் ஆடுகள் ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடந்தது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடு, மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் விலையும் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் விற்பனையானது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையையொட்டி புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: