இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் சென்னை ஆசிரியையுடன் உல்லாசம் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்: நண்பர்களுடனும் பழக வற்புறுத்தியதால் கைது

சேலம்: இன்ஸ்டாகிராம் காதலியான அரசு பள்ளி ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மஞ்சினி புங்கவாடியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சுரேஷ்குமார் (32) நண்பராகியுள்ளார். முதலில் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு நண்பர்களாக பேசியுள்ளனர். அது காதலாக மாறியதையடுத்து, கடந்த 4 மாதமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டபோது, ஆசிரியை, சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு பஸ்சில் புறப்பட்டுள்ளார். அப்போது தொடர்பு கொண்டு பேசிய காதலன் சுரேஷ்குமார், அவரை வழியில் இறக்கி திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஓட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை ஆசிரியைக்கு தெரியாமல் சுரேஷ்குமார் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

ஆசிரியை சென்னைக்கு திரும்பிய நிலையில், தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். அதில், ‘எனது நண்பர்களுடன் நீ பேச வேண்டும்’ என ஆசிரியையை சுரேஷ்குமார் வற்புறுத்தியுள்ளார். அதுதொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பின் கடந்த சில நாட்களாக சுரேஷ்குமார், ஆசிரியைக்கு போன் செய்து தான் கூப்பிடும் போது தன்னுடன் வந்து உல்லாசமாக இருக்க வற்புறுத்தியிருக்கிறார். அப்படி செய்யாவிட்டால், இருவரும் ஓட்டலில் உல்லாசமாக இருந்த வீடியோவை குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ளோருக்கும் அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதனால் பயந்து போன ஆசிரியை ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியையை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தது, அதனை வெளியிடுவதாக கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை (32) கைது செய்தனர். பின்னர், அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் சென்னை ஆசிரியையுடன் உல்லாசம் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்: நண்பர்களுடனும் பழக வற்புறுத்தியதால் கைது appeared first on Dinakaran.

Related Stories: