கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15%) ஒதுக்கப்படுகின்றன. இவை தவிர, தமிழகத்துக்கு 597 இடங்கள் இருக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக் படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில், உணவு தொழில்நுட்ப படிப்புக்கான 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15%) தவிர, எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பிவிஎஸ்சி – ஏஹெச், பி.டெக் படிப்புகளுக்கு 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12ம் தேதி காலை 10 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

The post கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: