அதிமுக மாஜி அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடுவதாக மிரட்டல் எதிரொலி; அமித்ஷா சந்திப்பை ரத்து செய்த எடப்பாடி: பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி மறுப்பு

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை மிரட்டல் எதிரொலியாக அமித்ஷா சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி ரத்து செய்து விட்டார். இதனால் பன்னீர்செல்வத்தையும் சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார். கூட்டணியை இறுதி செய்ய பாஜக எடுத்த முடிவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் தொடங்க இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்யவும், பாஜகவுக்கு எதிரான பலம்பொருந்திய கூட்டணியை ஏற்படுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்காக பீகாரில் வருகிற 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி கூட்டணியை இறுதி செய்கின்றன. குறிப்பாக 450 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு முடிவுகளையும் எடுக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால், பாஜகவும் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. பல்வேறு கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விட்டதால், பல ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை சேர்க்கும் பணியை அமித்ஷா தொடங்கியுள்ளார். ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா முடிவு செய்துள்ளார். அதிமுகவில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி ஆகியோரை ஒன்றிணைக்கும் பணிகளை செய்யுமாறு அமித்ஷா எடப்பாடியை கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டார்.

கட்சி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வந்து விட்டதால், அவர்களை சேர்த்து மீண்டும் குழப்பம் உருவாக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். பாஜகவுக்கும் வேறு வழி இல்லாததால், அதிமுகவுடன் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காகத்தான் எடப்பாடியை டெல்லி வரும்படி அமித்ஷா அழைத்தார். அப்போது அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் குறித்தும், எடப்பாடி குறித்தும் அண்ணாமலை தாக்கியிருந்தார். இது குறித்த புகார்களை அமித்ஷாவிடம் கூறிய எடப்பாடி, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அண்ணாமலையையும் டெல்லிக்கு அழைத்த அமித்ஷா இருவரையும் சந்திக்க வைத்து அதிர்ச்சி கொடுத்தார். இந்தநிலையில் அமித்ஷா அதிமுக கூட்டணி இறுதிப்படுத்த முடிவு செய்தார். இதற்காக அமித்ஷா இன்று இரவு 8.45 மணிக்கு சென்னைக்கு வருகிறார். விமானநிலையத்தில் இருந்து நேராக ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு 9 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அப்போது கூட்டணியை இறுதிப்படுத்தவும் திட்டமிட்டிருந்தார்.

பின்னர் பன்னீர்செல்வத்தையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதேநேரத்தில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சமீப நாட்களாக, அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி வருகிறார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. தனது அதிருப்தியை வெளிப்படுத்தவே, அமித்ஷா சென்னை வரும்போது தனக்கு கால் வலிப்பதாக கூறி சென்னைக்கு வருவதை தள்ளிப்போட்டு விட்டார். அமித்ஷாவுடனான சந்திப்பை ரத்து செய்து விட்டார். இது அமித்ஷாவுக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. டெல்லியில் வந்து சந்திக்க பல நாட்களாக காத்திருந்த எடப்பாடி சென்னை வரும்போது சந்திக்காதது பாஜக தலைவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அமித்ஷா சந்திக்க முடியாததால், பன்னீர்செல்வத்தையும் சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார்.

எடப்பாடியை பார்க்காமல், பன்னீர்செல்வத்தைப் பார்த்தால் அது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அமித்ஷா கருதுகிறார். இதனால் அதிமுக தலைவர்கள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சித் தலைவர்களான பிரேமலதா, ஏ.சி.சண்முகம், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர்களையும் சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார். அவர்களது சந்திப்பும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக கூட்டணியை இன்று முடிவு செய்யும்முடிவோடு சென்னை வரும் பயணம், தோல்வியில் முடிந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் முடிவால், எந்தக் கூட்டணிக் கட்சியின் தலைவர்களையும் அமித்ஷா சந்திக்க வில்லை என்று கூறப்படுகிறது.இதனால் சென்னையில் இன்று இரவு விஐபிக்களை மட்டுமே சந்திப்பவர், நாளை காலையில் கோவிலம்பாக்கத்தில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் விமானம் மூலம் வேலூர் செல்கிறார். அங்கு கூட்டம் முடிந்ததும் சென்னை விமானநிலையம் திரும்புகிறார். மாலையில் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அமித்ஷா-விஷால் சந்திப்பு
தேர்தல் நெருங்குவதால், நடிகர்கள், விஐபிக்களை சந்தித்து அவர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக செய்து வருகிறது. அதன்படி சமீபத்தில் தெலுங்கு மற்றும் இந்தி நடிகர்கள் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினர். சென்னையில் இன்று இரவு அமித்ஷாவை நடிகர் விஷால் சந்தித்துப் பேசுகிறார். பின்னர், விளையாட்டு வீரர்கள், விருது பெற்ற விஐபிக்கள், தொழில் அதிபர்கள் என 50 பேரை அவர் சந்திக்கிறார்.

The post அதிமுக மாஜி அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடுவதாக மிரட்டல் எதிரொலி; அமித்ஷா சந்திப்பை ரத்து செய்த எடப்பாடி: பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: