சென்னை: தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.75.03 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தேர்தல்களை நடத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பினை உறுதி செய்வதற்காக, தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 136 பொதுப்பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 151 செலவினப் பார்வையாளர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
குடிமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல்கள் தொடர்பான புகார்களை நேரடியாகப் பதிவு செய்யவும் அல்லது விதிமீறல்களைப் புகாரளிக்கவும் ஏதுவாக, மத்திய பார்வையாளர்களின் தொடர்பு விவரங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் வலுவான தேர்தல் செலவினக் கண்காணிப்பினை உறுதி செய்யும் விதமாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கக் குழுக்கள் தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தத் தீவிரப்படுத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக. 21 மார்ச் 2026 நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக பின்வரும் பறிமுதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ரொக்கப் பணம் ரூ.23.74 கோடி, மதுபானம் ரூ.51 லட்சம், போதைப்பொருள் சார்ந்த பொருட்கள் ரூ.5.63 கோடி, விலைமதிப்பற்ற உலோகங்களான தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் ரூ.23.19 கோடி, இதர பொருட்கள் அல்லது இலவசங்கள் ரூ.21.96 கோடி என மொத்தம் ரூ.75.03 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணையவழி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான நேர ஒதுக்கீடுகளை முன்பதிவு செய்தல், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் போன்ற தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு வசதியளிக்கும் ஒரு விரிவான டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது.
விண்ணப்பதாரர்கள் //suvidha.ecl.gov.in/ என்ற இணையதளத்தை அணுகி இணையவழி செயல்முறையை நிறைவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எடுத்து, தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். சுவிதா இணையதளம் தேர்தல் தொடர்பான செயல்களில் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தி மனிதத் தலையீட்டைக் குறைக்கிறது. மேலும் தேர்தல்களின் போது வெளிப்படையான அனுமதி செயல்முறையை உறுதி செய்கிறது. இதன் மூலம் இதுவரை 2,443 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 737 விண்ணப்பங்கள் காலக்கெடுவுக்குள் தீர்க்கப்பட்டன. மீதமுள்ளவை செயலாக்கத்தில் உள்ளன.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின் ஒரு பகுதியாக, ஜனநாயகச் செயல்முறையில் பங்கேற்பதற்காக, தகுதிவாய்ந்த ஒவ்வொரு குடிமகனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வது இன்றியமையாததாகும். எனவே, தகுதிவாய்ந்த அனைத்துக் குடிமக்களும் https://electoralsearch.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், பெயரைச் சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 26.3.2026 ஆகும்.
குடிமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரும் விண்ணப்பங்களை, படிவம்-6 (Form-6)-ஐப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் எளிதாகப் பதிவு செய்துகொள்ளும் வகையில், https://www.voters.eci.gov.in/ என்ற இணையவழி வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இத்தேவைக்காக, Google Play Store-ல் உள்ள “ECINet” என்ற கைப்பேசிச் செயலியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், குடிமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, “Book a Call with BLO” (வாக்கு சாவடி நிலை அலுவலருடன் தொலைபேசி வழித் தொடர்பு) என்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயரை பதிவு செய்துகொள்வது, கடைசி நேரத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க உதவும்.
எனவே, அனைத்து குடிமக்களும் தேர்தல் செயல்முறையில் முழுமையாகப் பங்கேற்பதற்கு ஏதுவாக, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
