அன்று அத்வானிக்கு நடந்தது இன்று மோடிக்கும் நடக்கும்!: தேஜஸ்வி யாதவ் ஆவேசம்

பாட்னா: அன்று அத்வானிக்கு நடந்தது போன்று இன்று மோடிக்கும் நடக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறினார். அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் 23ம் தேதி பாட்னாவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ‘மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

தோல்வி பயம் வரும்போதெல்லாம் இரு சமூககளுக்கு இடையே மோதலை தூண்டிவிடுகிறது. கடந்த 1990ல் ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவரின் யாத்திரையை, அப்போதைய முதல்வரும், எனது தந்தையுமான லாலு பிரசாத் யாதவ் தடுத்து நிறுத்தினார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும். அப்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அத்வானியின் ரத யாத்திரையை லாலு தடுத்து நிறுத்தியது போல், மோடியின் வெற்றி என்ற ரதத்தை நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி தடுத்து நிறுத்தும். அன்று லாலு செய்ததை போல் இன்று நிதிஷ் செய்வார்’ என்றார்.

The post அன்று அத்வானிக்கு நடந்தது இன்று மோடிக்கும் நடக்கும்!: தேஜஸ்வி யாதவ் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: