தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.

நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிப்பர்ஜாய்” இன்று காலை 08:30 மணி அளவில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 830 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 36 மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும். வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: இன்று தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் எனவும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை மனிதம் தகவல் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை; அரபிக்கடல் பகுதிகள்: 09.06.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, இரவு முதல் அதே பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று முதல் 13ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தகவ ளத்தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: