பாடாலூர் அடுத்த செட்டிகுளத்தில் பலாப்பழம் விற்பனை படுஜோர்

பாடாலூர், ஜூன் 9: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக பேரம் பேசி வாங்கி செல்கின்றனர். முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சுவைமிகுந்தது. சுவைக்க சுவைக்க திகட்டாத பழ வகைகளில் இதுவும் ஒன்று. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவது உண்டு, ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பு சத்தை எளிதில் கரைக்கூடியது. ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் கிடைக்கும் இப்பழத்தை கிடைக்கும்போது அதிகம் வாங்கி சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் பச்சமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்களுக்கு தனி மவுசு உண்டு. பலாச்சுளை நன்கு முதிர்ச்சி அடைந்தும், மிகவும் சுவையாகவும் இருக்கும். தற்போது பலாப்பழ சீசனை தொடர்ந்து, பச்சமலை பகுதியிலிருந்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு லோடு ஆட்டோக்களில் ஏற்றிக்கொண்டு கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். அதன்படி வருடாவருடம் கோடைகாலத்தில் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வருவது வழக்கம்.

ஒரு பலாப்பழம் ரூ.30 முதல் ரூ.60 வரை (சைசுக்கு தகுந்தாற்போல்) வாகன வாடகை ஆள்கூலி உள்பட ஒரு பலம் 100 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கிராமங்களில் பலாப்பழம் உற்பத்தி இல்லாததால், இங்கு எப்போதும் பலாப்பழத்திற்கு நல்லவிலை கிடைத்து வருகிறது. இதனால் ஒரு பலாப்பழம் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு நகரங்களுக்கு சென்று மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், சந்தை, பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் நிறுத்தி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் விற்பனை சூடு பிடித்துள்ளது என பலாப்பழ வியாபாரி கூறினார்.

The post பாடாலூர் அடுத்த செட்டிகுளத்தில் பலாப்பழம் விற்பனை படுஜோர் appeared first on Dinakaran.

Related Stories: