8 இடங்களில் நாளை நடக்கிறது: பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(10ம் தேதி) 8 இடங்களில் பொது விநியோகத்திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, குறிப்பிட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை(10ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, கிருஷ்ணகிரி வட்டத்தில் கம்மம்பள்ளி தரப்பு எம்.கொல்லப்பள்ளி கிராமத்திலும், பர்கூர் வட்டத்தில் சின்னமட்டாரப்பள்ளி தரப்பு பசவண்ணகோயிலிலும், போச்சம்பள்ளி வட்டம் மகாதேவகொல்லஅள்ளி தரப்பு சாமல்பட்டியிலும், ஊத்தங்கரை வட்டம் காட்டேரி, ஓசூர் வட்டம் ஒன்னல்வாடி, சூளகிரி வட்டம் காமன்தொட்டி, தேன்கனிக்கோட்டை வட்டம் ரத்தினகிரி தரப்பு சாத்தனக்கல், அஞ்செட்டி வட்டம் அஞ்செட்டி மேற்கு தரப்பு எருமத்தனப்பள்ளியிலும் நடைபெறுகிறது. எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post 8 இடங்களில் நாளை நடக்கிறது: பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: