ஆன்லைன் வழியாக செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் திட்டம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்ல பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழி (ஆன்லைன்) மூலம் உரிமம் வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், மேயர் பிரியா கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கால்நடை மருத்துவப் பிரிவின் கீழ் 4 செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்கள், 5 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள், 4 இறைச்சிக் கூடங்கள், 2 மாட்டுத் தொழுவங்கள் மற்றும் 1 தோல் நோய் பராமரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4 செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்களில், சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட செல்ல பிராணிகளுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது 4 செல்ல பிராணிகளுக்கான சிகிச்சை மையங்களில் செல்ல பிராணிகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.50 பெறப்பட்டு, செல்ல பிராணிகள் வளர்ப்பதற்குண்டான உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2022-23ம் நிதியாண்டில் 27,295 செல்ல பிராணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு, 1700 செல்ல பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் 20,385 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, 15,755 தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செல்ல பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் நலன் கருதி செல்ல பிராணிகளை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து வராமல் சென்னை மாநகராட்சியின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்க தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து செல்ல பிராணிகளுக்கும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், வயது முதிர்ந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட செல்ல பிராணிகளை தெருவில் விடுவதும் தடுக்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கை மண்டல வாரியாக கணக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை அனைத்து செல்ல பிராணிகளின் உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொண்டு, சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைன் மூலம் ரூ.50 செலுத்தி, தங்கள் செல்ல பிராணிகளுக்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழு தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி, கால்நடை சிகிச்சை துறை இயக்குநர் குமரவேல், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், கால்நடை மருத்துவ அலுவலர் கமால் ஹூசைன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆன்லைன் வழியாக செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் திட்டம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: