பள்ளி வளாகத்தில் மரக்கிளைகளை அகற்றியபோது சாலையோர கடைகள் சேதம்

ஜலகண்டாபுரம், ஜூன் 9: ஜலகண்டாபுரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த மரக்கிளைகளை முன்னறிவிப்பின்றி அகற்றிய போது அதன் கிளைகள் முறிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் சேதமடைந்தது. ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3ம் தேதி இரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததில் பல இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து, ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்கம்பங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை கண்டறிந்து அதனை அகற்றும் பணிகளில் கடந்த சில நாட்களாக மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக ஜலகண்டாபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டு பழமையான ஆலமரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் நேற்று பொதுப்பணித்துறையினருடன் இணைந்து மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.இந்நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி 10க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் மரத்தின் கிளைகளை அகற்றியதால் அதன் கிளைகள் உடைந்து கடைகளின் மீது விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட கடைகள் பலத்த சேதமடைந்தது. போதிய முன்னறிவிப்பு இன்றி மர கிளைகள் அகற்றியதால் கடைகள் சேதமடைந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

The post பள்ளி வளாகத்தில் மரக்கிளைகளை அகற்றியபோது சாலையோர கடைகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: