மனைவியுடன் தகாத உறவு; நண்பனுக்கு கத்திக்குத்து: டிரைவர் கைது

சேலம்: சேலத்தை அடுத்துள்ள கருப்பூர் வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (34), டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 வயதில் மகன் உள்ளார். இவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் (36). இவர் அடிக்கடி பாலமுருகனின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அதில், அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களுக்குள் தகாத உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த பாலமுருகன், தனது மனைவி மற்றும் நண்பனை கண்டித்துள்ளார். 2 வயது குழந்தையின் வாழ்க்கை வீணாகிவிடும், அதனால் தகாத உறவை கைவிடும்படி மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் நண்பன் மணிகண்டனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியூரில் வசித்த அவர்கள், சில நாட்களுக்கு முன் பாலமுருகனின் வீட்டிற்கு எதிரே மற்றொரு வீட்டில் வந்து குடியேறியுள்ளனர். இதனால் 2 வயது குழந்தை அடிக்கடி அம்மா எனக்கூறிக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்றுள்ளது. இது பாலமுருகனை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று, பாலமுருகன், அவரது தந்தை சுப்பிரமணி, பெரியப்பா கிருஷ்ணன் ஆகியோர் மணிகண்டனின் வீட்டிற்கு சென்று ஏன் இங்கு வந்து எங்களுக்கு பிரச்னையை கொடுக்கிறீர்கள் எனக்கேட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டனின் வயிறு, தோள்பட்டையில் பாலமுருகன் கத்தியால் குத்தினார். பின்னர், 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் உள்ளிட்ட 3 பேர் மீது கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post மனைவியுடன் தகாத உறவு; நண்பனுக்கு கத்திக்குத்து: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: