கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சுற்றிய போதை ஆசாமிகள் விரட்டியடிப்பு:  போலீசார் அதிரடி நடவடிக்கை  பொதுமக்கள் வரவேற்பு

அண்ணாநகர், ஜூன் 8: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் சுற்றித்திரிந்த போதை ஆசாமிகள் விரட்டி அடிக்கப்பட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாநிலம், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு மற்றும் முக்கிய பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வார்கள். தினமும் சொந்த ஊர் செல்வது, பல்வேறு வேலை நிமித்தமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இப்படி வந்து செல்பவர்களில் ஏராளமான பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் கிடைக்காத நேரம் அல்லது தவிர்க்க முடியாத வேறு காரணங்களால் இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திலேயே தங்கியிருந்து, அதிகாலையில் பஸ்களை பிடித்து செல்கின்றனர். மேலும், ஆதரவற்றவர்களும் பஸ் நிலையத்தில் இரவு, பகல் நேரங்களில் தூங்குகின்றனர். இதை பயன்படுத்தி பஸ் நிலையத்தில் வழிப்பறி, செல்போன், செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களில் ஆசாமிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர ரவுடிகளும் பயணிகள், பொதுமக்களிடம் ரகளை செய்து வந்தனர். இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு போதையில் வரும் ஆசாமிகளும் பஸ் நிலையத்தில் அவ்வப்போது ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்பேடு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து சென்று போதை ஆசாமிகளை விரட்டி அடித்தனர். பயணிகளை தவிர மற்ற வெளியாட்கள் யாரும் பஸ் நிலையத்தில் தங்கக்கூடாது என்று விரட்டி அடிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘போலீசார் தீவிர ரோந்து பணியால் மது பிரியர்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் தொடர்ந்து போலீசார் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டால் கோயம்பேடு பஸ் நிலைய பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் அடியோடு குறைந்துவிடும். போதை ஆசாமிகளும் பேருந்து நிலையத்துக்கு வருவதற்கு பயப்படுவார்கள்’ என்றனர். இதுபோல் தொடர்ந்து போலீசார் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டால் கோயம்பேடு பஸ் நிலைய பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் அடியோடு குறைந்துவிடும்.

The post கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சுற்றிய போதை ஆசாமிகள் விரட்டியடிப்பு:  போலீசார் அதிரடி நடவடிக்கை  பொதுமக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: