பிரதமரின் உதவித்தொகை பெற நில ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்: விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 8: பிரதமரின் உதவித்தொகை பெற நில ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்று விவசாயிகளுக்கு திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடு பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக விவசாய குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ₹2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ₹6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 13 தவணை உதவித் தொகை தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த 14வது தவணைத் தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது. 14வது தவணைத் தொகையினைப் பெற நில ஆவணங்கள் பதிவேற்றம், இகேஒய்சி பதிவேற்றம் மற்றும் ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகிய விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. இதுவரை நில ஆவணங்கள் பதிவேற்றம், இகேஒய்சி மற்றும் ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகியவற்றினை செய்யாமல் உள்ள பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் உடனடியாக இதனை செய்தால் மட்டுமே அடுத்த தவணை பி.எம்.கிசான் நிதி உதவித் தொகை கிடைக்கும். மேலும், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும், தபால் துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டார்.

The post பிரதமரின் உதவித்தொகை பெற நில ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்: விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: