வீட்டில் 7.50 டன் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது

*உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து, மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி நந்தகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி, திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் கிராமத்தில் சென்னம்மாள்(36) என்பவரது பாழடைந்த வீட்டில் சோதனை செய்தபோது, பொது விநியோக திட்டத்தில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கர்நாடக மாநிலம், பங்காருபேட்டைக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 154 மூட்டைகளில் இருந்த 7,550 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவற்றை திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ரேஷன் அரிசியை பதுக்கிய சென்னம்மாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் 7.50 டன் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: