காசிமேடு பகுதியில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து: 5 ரவுடிகள் கைது; பைக், 2 கத்தி பறிமுதல்

காசிமேடு: சென்னை காசிமேடு இந்திராநகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (44). இவர், நேற்று மதியம் தனது வீட்டின் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த 6 பேர் கும்பல், ஆரோக்கியராஜை வழிமறித்து வீண் தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆரோக்கியராஜை அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின்பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிமேடு இந்திராநகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பிரதீப் (19), இவரது சகோதரர் பிரவீன் (22), யுவேந்திரன் (எ) மண்டை (19), காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த அஜய்(19), ஜீவரத்தினம்நகர் ஹவுசிங் போர்டை சேர்ந்த சைலேஷ் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 கத்திகள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஆரோக்கியராஜை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

மேலும் பிரதீப், யுவேந்திரன் ஆகியோர் காசிமேடு காவல் நிலைய சரித்திரபதிவேடு குற்றவாளிகள் என்பதும், பிரதீப் மீது ஒரு கொலை, ஒரு கொலை முயற்சி உட்பட 7 குற்ற வழக்குகளும், பிரவீன் மீது ஒரு கொலை முயற்சி உட்பட 3 குற்ற வழக்குகளும், யுவேந்திரன் மீது ஒரு கொலை, ஒரு கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

The post காசிமேடு பகுதியில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து: 5 ரவுடிகள் கைது; பைக், 2 கத்தி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: