யூடியூப் சேனல் தொடங்கி மோசடி தம்பதி உள்பட 3 பேர் கைது-44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் அபகரிப்பு

கோவை : கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா (38). இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கி உள்ளனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தம்பதியினர் தங்களது யூடியூப் சேனலில் ரூ.1,200 முதலீடு செய்தால், 20 நாட்களில் மூலதன தொகையுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,500 ஆக திருப்பி தரப்படும் என்று தெரிவித்தனர். இந்த அறிவிப்பை நம்பிய பலர் இவர்கள் கூறிய வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளனர்.

இதனிடையே தம்பதி அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மேலும் தம்பதி தங்களது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதலீடு செய்த கோவை பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா (30) கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தம்பதி 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா, இவர்கள் இருவருக்கும் உதவியாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 45 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,250 பணம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post யூடியூப் சேனல் தொடங்கி மோசடி தம்பதி உள்பட 3 பேர் கைது-44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் அபகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: