மது அருந்த பணம் தராததால் டிரைவரை கத்தியால் வெட்டி ₹8,700, செல்போன் பறிப்பு: ரவுடி கைது

சென்னை: தி.நகர் சவுத் போக் சாலையை சேர்ந்தவர் அரவிந்தன் (24). டிரைவரான இவர், தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் தனது லாரி உரிமையாளரிடம் சம்பள பணம் ₹9 ஆயிரம் வாங்கி கொண்டு, டாஸ்மாக் பாரில் பீர் ஒன்று வாங்கியுள்ளார். பிறகு அரவிந்தன் தி.நகர் வித்யோதய மெயின் ரோடு பகுதியில் அமர்ந்து பீர் குடித்து கொண்டிருந்தார். அப்போது, அருகில் 4 பேர் ஒன்றாக அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அரவிந்தனை பார்த்த உடனே, 4 போதை ஆசாமிகளும், எங்களுக்கு நீ குடிக்கிற பீர் வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி அரவிந்த பாதி பீரை பாட்டிலுடன் கொடுத்துள்ளார்.

ஆனால் போதை ஆசாமிகள் இது எங்களுக்கு போதாது, பணம் கொடு, நாங்கள் கடையில் வாங்கிக்கொள்கிறோம், என்று மிரட்டியுள்ளனர். உடனே லாரி டிரைவர் அரவிந்தன் தனது சம்பள பணத்தை பறித்து விடுவார்கள் என்று அச்சத்தில் அங்கிருந்து புறப்பட்டார். உடனே 4 போதை ஆசாமிகள் கையில் வைத்திருந்த 2 அடி நீள பட்டாக்கத்தியை எடுத்து அரவிந்தன் தலையில் ஓங்கி வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரிடம் இருந்து ₹8,700 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அரவிந்தன் ஆட்டோ ஒன்று மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டது.

பின்னர் சம்பவம் குறித்து லாரி டிரைவர் அரவிந்தன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், தி.நகர் கங்கை கரைபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திக் (எ) மிட்டாய் கார்த்திக் (19), அவரது நண்பர் மணிகண்டன் உட்பட 4 பேர் என தெரியவந்தது. அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரவுடி கார்த்திக்கை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மது அருந்த பணம் தராததால் டிரைவரை கத்தியால் வெட்டி ₹8,700, செல்போன் பறிப்பு: ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: