நாகை: நாகை தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் காப்பாளர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். நாகையில் தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தாய், தந்தையை இழந்த நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். 20 குழந்தைகளுக்கு ஒரு காப்பாளர் என்ற அடிப்படையில் பெண் காப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஒரு 12 வயது சிறுவனுக்கு பெண் காப்பாளர் சசிகலா(45) இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவன், காப்பக இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து காப்பக நிர்வாகி அளித்த புகாரின்பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அதில் சிறுவன் தெரிவித்தது உண்மை என்பது தெரியவந்ததால் போக்சோ சட்டத்தின்கீழ் சசிகலாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து நாகை நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையிலடைத்தனர்.
The post சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண் காப்பாளர் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.