பல்வேறு காரணங்களால் பாட்னாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

டெல்லி : வரும் 12ம் தேதி நடைபெற இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் இம்மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை கொண்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளனர். திமுகவும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்யும் என்று அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, வரும் 12ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இதில் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கோரிய 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்க இசைவு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அன்றைய தினம் தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதால் கூட்டத்தை வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என்று திமுக கேட்டுக் கொண்டது. மேலும் தற்போது அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி வரும் 15ம் தேதி தான் நாடு திரும்புகிறார். அத்துடன் மருத்துவ காரணத்திற்காக சோனியா காந்தியும் அவருக்கு உதவியாக பிரியங்கா காந்தியும் வெளிநாடு சென்றுள்ளனர். இது போன்ற பல்வேறு காரணங்களால் வரும் 12ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் இம்மாத 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பல்வேறு காரணங்களால் பாட்னாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: