சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்க மாடலிங் பெண்ணை அழைத்து வந்த பாலியல் புரோக்கர் கைது: சொகுசு கார், 10 செல்போன், 2 ஸ்வைபிங் மெஷின், 37 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்ய வடமாநில மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு-2 இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், கடந்த 2ம் தேதி மடிப்பாக்கம் சாஸ்திரி நகர், பஜார் மெயின் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம், காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். ஆனால், இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது காரில் இருந்த நபர், பெண்ணை அழைத்து வந்து சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய இருப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் ஷேக் சோமன்(எ)சால்மன்(42) என தெரியவந்தது. இவர், மாடலிங் பெண்கள், வேலை தேடும் இளம் பெண்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இதுபோல சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களை விற்பனை செய்து இருப்பதும் உறுதியானது.

இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து பிரபல பாலியல் புரோக்கர் ஷேக் சோமன்(எ)சால்மனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவனிடம் மாடலிங் பெண் மீட்கப்பட்டார். மேலும், ஒரு சொகுசு கார், 10 செல்போன்கள், 2 ஸ்வைபிங் மெஷின், 37 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சால்மனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட மாடலிங் பெண் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

The post சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்க மாடலிங் பெண்ணை அழைத்து வந்த பாலியல் புரோக்கர் கைது: சொகுசு கார், 10 செல்போன், 2 ஸ்வைபிங் மெஷின், 37 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: