எண்ணற்ற சமூகநல திட்டங்களால் இன்றைய நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: எண்ணற்ற சமூகநல திட்டங்களால் இன்றைய நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் 100வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதன பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான – மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது. அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், பண்டித அயோத்திதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், ஏ.பி.பாத்ரோ, எம்.சி.இராஜா, பனகல் அரசர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என தமிழினத்தின் இனமான – பகுத்தறிவு – சுயமரியாதை உணர்வை காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தலைமை தாங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். எண்ணற்ற சமூகநல திட்டங்களால் இன்றைய நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி அவர். தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழை போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எண்ணற்ற சமூகநல திட்டங்களால் இன்றைய நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: