ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு உதவ சென்னை காவல்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு

சென்னை: ஓடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை காவல்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (02.06.2023) இரவு, ஒடிசா மாநிலம், பலசூர் என்ற இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு இரயில் மோதிக் கொண்ட விபத்தில், இரயில் பெட்டிகள் சேதமடைந்து, உயிர்சேதம் ஏற்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இதில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த பயணிகளும் அடங்குவர். ஆகவே, காயமடைந்த தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளை மீட்கவும், அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கவும், மற்ற பயணிகளை தமிழகம் அழைத்து வரவும், தமிழ்நாடு அரசு சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசு பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டறையில் (எழிலகம்), அரசு அதிகாரிகள் குழுவினருடன் பணியாற்ற, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் குழு இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னையிலுள்ள பேரிடர் மீட்பு மையம் உதவி எண். 94458 69843, இரயில்வே உதவி எண்.90035 11919 மற்றும் ஒடிசா உதவி மையம் எண்.94422 35375 ஆகிய உதவி மைய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்படி விபத்துக்குள்ளான இரயில் பயணிகளுக்கு உதவுவதற்காக, சென்னை பெருநகர காவல்துறையால் கீழ்க்கண்ட பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்டிரல் நிலைய சிறப்பு ஏற்பாடுகள்:
1.விபத்துக்குள்ளான இரயிலில் பயணம் செய்த தமிழகம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் விமானம் மற்றும் இதர இரயில்கள் மூலம் சென்னை வருவதால், சென்னை விமான நிலையம் மற்றும் டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். சென்டிரல் இரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில், இரயில்வே மற்றும் தமிழ்நாடு இரயில்வே காவல்துறை (GRP) உடன் இணைந்து சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

2.மேற்படி இரயிலில் பயணம் செய்து, சென்னை, டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையம் திரும்பும் பயணிகளுக்கு உதவுவதற்காக, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் துணை ஆணையாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., (செல் எண்.94982 33333), தலைமையில், பூக்கடை உதவி ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணபிரபு (செல் எண்.94440 33599) மற்றும் சிறப்பு உதவி மைய வழிகாட்டும் அதிகாரி (Liaison Officer)/C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் திரு.தளவாய்சாமி (செல் எண்.98409 76307) மற்றும் காவல் குழுவினர், சென்டிரல் இரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருப்பர். மேலும் காவல் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.

3.காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சைக்கு அளிக்க இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் RGGGH), உதவி ஆய்வாளர் ரமேஷ் (செல் எண்.94442 06868), சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ஆனந்தி (செல் எண்.94981 32395) தலைமையில் காவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்டிரல் இரயில் நிலையத்தில் உதவி தேவைப்படும் பயணிகள் 044-23452454 மற்றும் 94981 00211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

4.மேலும், டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்டிரல் இரயில் நிலைய கட்டுப்பாட்டறை எண்.044-25330952 மற்றும் 044-25330952 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்:
1)ஒடிசாவில் விபத்துக்குள்ளான இரயிலில் பயணம் செய்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் வருகை தரும்போது, அங்குள்ள காவல் சிறப்பு கட்டுப்பாட்டறை குழுவினர் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்காக, சென்னை விமான நிலையத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உதவி எண்.94981 00151 அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சிறப்பு ஏற்பாடுகள்

2)சென்னை விமான நிலையம் திரும்பிய பயணிகளுக்கு, சிகிச்சை அளிக்கவும், படுகாயமடைந்து சென்னை திரும்பியவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனை அழைத்து செல்லவும், அவ்வாறு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் Green corridor வழித்தடத்தில் விரைவாக அழைத்துச் செல்லவும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் வாகனம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

3)மேலும், பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு டாக்சி மற்றும் ஆட்டோக்களில் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், பயணிகளிடம் இருந்து ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்காததை உறுதி செய்யவும், போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி விபத்துக்குள்ளான இரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு உதவி தேவைப்படும் வகையில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை எண்.044-23452359, தமிழக காவல் கட்டுப்பாட்டறை எண்.100, அவசர உதவி எண்.112 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறவும், குறைகள் இருப்பின் தெரிவிக்கவும், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

The post ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு உதவ சென்னை காவல்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: