சுகாதார அலுவலர் பதவி உள்ளிட்ட 5 தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சுகாதார அலுவலர் பதவி உள்ளிட்ட 5 தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவியில் காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த 13.2.2023 நடைபெற்றது. இத்தேர்வில் 255 பேர் கலந்து கொண்டனர். எழுத்து தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் 33 பேர் நேர்முக தேர்வு, கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், மதிப்பெண்கள் மற்றும் தர வரிசை தேர்வாணையம் வலைளதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 15ம் தேதி நடைபெறும். தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்த துறையின் சிறை அலுவலர்(ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர்(பெண்கள்) பதவியில் காலியாக உள்ள 8 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 32 பேர் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கல்வி பணியில் அடங்கிய நிதியாளர் பதவியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 20 பேர் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 24 பணியிடத்துக்கு நடத்ப்பட்ட தேர்வில் 2557 பேர் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் பதவி) பதவியில் காலியாக உள்ள 7 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் 203 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுகாதார அலுவலர் பதவி உள்ளிட்ட 5 தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: