சென்னை: சென்னை புழல் மத்திய தண்டனை சிறையில் சுமார் 900க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் கை தொழில் கற்க விரும்பும் சிறைவாசிகளுக்கு தையல், பிரிண்டிங் அச்சுத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறை வளாகத்தில் உள்ள காலியிடங்களில் கரும்பு, நெல், வேர்க்கடலை, எள், வாழை மற்றும் பூச்செடிகள் உள்ளிட்டவற்றை 15க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இணைந்து சுமார் 50 சென்ட் நிலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு பயிரிட்டனர்.
வேர்க்கடலை செடிகள் வளர்ந்து, அறுவடைக்கு வந்த நிலையில் அதை அறுவடை செய்தனர். இதை சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், ‘‘சிறை வளாகத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட வேர்க்கடலைகளை, சிறை வளாகத்தில் உள்ள எண்ணெய் தயாரிப்பு கூடத்தில் கொடுத்து எண்ணெய்யாக அரைக்கப்படும். பின்னர், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்’’ என்றார். நிகழ்ச்சியில், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ், அலுவலர் திருமலை உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டு, வேர்க்கடலை அறுவடை செய்த கைதிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
The post புழல் மத்திய சிறை வளாகத்தில் வேர்க்கடலை அறுவடை செய்த கைதிகள் appeared first on Dinakaran.