பூந்தமல்லி அருகே பரபரப்பு அடுத்தடுத்து 5 வாகனங்கள் பயங்கர மோதல்: 10 பேர் காயம்; போலீசார் விசாரணை

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நேற்று காலை, பேருந்து, லாரி, கார், வேன் மற்றும் ஆட்டோ என ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. குத்தம்பாக்கம் 4 சாலை சந்திப்பு அருகே மினி சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால், பின்னால் வேகமாக வந்த 2 வேன்கள், கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற ஒரு தனியார் பஸ் உள்பட 5 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால், 5 வாகனங்களில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதை பார்த்த அவ்வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வேலை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சென்றவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், விபத்தில் சிக்கிய 5 வாகனங்களையும் கிரேன் உதவியால் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பூந்தமல்லி அருகே பரபரப்பு அடுத்தடுத்து 5 வாகனங்கள் பயங்கர மோதல்: 10 பேர் காயம்; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: