தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி: ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது என ஸ்டெர்லைட் எதிர்பாளர்கள் உடனான ஆலோசனைக்கு பின் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட்டுள்ளது . ஆலை கழிவுகளை அகற்றுபவர்கள் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆலை பராமரிப்பு பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கண்காணிப்பில் இருப்பார்கள். குழுவில் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 நபர்கள் இருப்பார்கள். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் அகற்றும் போது 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கழிவுகள் வெளியேற்றும் பணிகளுக்காக ஆலையில் தொழிலாளர்கள் செல்லும் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டு அந்த கேட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாரம் ஒருமுறை ஆலையில் எவ்வளவு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது தொடர்பான அறிக்கையினை ஆய்வுக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் இவ்வாறு கூறினார்.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி: ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: