கட்டுமான ஊழியர் மீது தாக்குதல் நாம்தமிழர் கட்சி நிர்வாகி கைது

திருவொற்றியூர்: மாதவரத்தில் கட்டுமான ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (32). தனியார் கட்டுமான நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு மாதவரம் பொன்னியம்மன்மேடு, திருமலை நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி பிரிவு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்ஷல் ராஜ்குமார் என்பவர், தனது வீட்டுக்கு எதிரே மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுமாறு தினேஷ்குமாரிடம் கூறியுள்ளார்.

கட்டுமான பணிகளை முடித்துவிட்டு பள்ளத்தை மூடுவதாக தினேஷ்குமார் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ்குமாரை தரக்குறைவாக திட்டிய மார்ஷல் ராஜ்குமார், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினேஷ்குமார் நேற்று முன்தினம் மாலை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் சிவக்குமார், 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று மார்ஷல் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

The post கட்டுமான ஊழியர் மீது தாக்குதல் நாம்தமிழர் கட்சி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: