ஆடல், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு இனி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டியது இல்லை: போலீசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: ஆடல், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு தந்தால் 7 நாட்களுக்குள் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி ஆடல்-பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் மற்றும் நடன, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையும், நீதிமன்றமும் ஏற்கனவே விதித்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது; ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு தந்தால் 7 நாட்களில் அனுமதி தர வேண்டும் அல்லது இல்லை என கூற வேண்டும். மேலும், 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். மேலும் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்ப டிஜிபி-க்கு ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது; ஆடல், பாடல் நிகழ்வு குறித்த புதிய மனுக்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை. ஆடல், பாடல், கரகாட்டம் நிகழ்ச்சியில் மனுதாரர் தரும் மனு அடிப்படையில் 7 நாளில் முடிவெடுக்க வேண்டும். இனி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியது இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

The post ஆடல், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு இனி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டியது இல்லை: போலீசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: