ஜிஎஸ்டி சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறின்றி இரவில் சாலை தூய்மைப்பணி: தாம்பரம் மாநகராட்சி அறிக்கை

தாம்பரம், ஜூன் 1: தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, முடிச்சூர், தாம்பரம் மார்க்கெட் பகுதிகள், திருநீர்மலை சாலைகள் மற்றும் பம்மல் பேருந்து சாலைகளில் நாள்தோறும் சுமார் 38 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பல்வேறு வகையான வாகனங்களைக் கொண்டு குப்பையை கையாளும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்து சாலைகளில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் போது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாநகராட்சியில் இரவு நேரங்களில் பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை வரை, முடிச்சூர், தாம்பரம் மார்க்கெட் பகுதிகள், திருநீர்மலை சாலைகள் மற்றும் பம்மல் பேருந்து சாலைகளில் 5 நான்கு சக்கர வாகனங்கள், 3 டிப்பர் லாரிகள், 2 கம்பாக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 60 தூய்மைப் பணியாளர்கள் மூலம் இரவு நேர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சியின் அலுவலர்களை நியமித்து இந்த பணிகளை கண்காணித்து மேலும் துரிதப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களின் வருகை, குப்பை சேகரிக்கும் நான்கு சக்கர வாகனங்கள், டிப்பர் லாரிகள் மற்றும் கம்பாக்டர் பயன்பாட்டு எண்ணிக்கையை உறுதி செய்திடவும், சாலைகள் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திடவும், அனைத்து தூய்மைப் பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து, பொதுமக்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்றவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

The post ஜிஎஸ்டி சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறின்றி இரவில் சாலை தூய்மைப்பணி: தாம்பரம் மாநகராட்சி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: