திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 800 மி.மீ விட்டமுள்ள பிரதான உந்து குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அயனாவரம் – குன்னூர் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படுவதால் இன்று (31ம் தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை மண்டலம் 4, 5, 6க்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மண்டலம் 4 – 42, 43, 48 தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகள், மண்டலம் 5 – 49, 50, 51, 52, 53 ராயபுரம் பகுதி, மண்டலம் 6 – 73, 77, 76 புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: