லேப்டாப் பறித்ததாக பொய் புகார்; ஜெர்மன் வாலிபர் மீது வழக்குப்பதிவு: கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு

பூந்தமல்லி: ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிரைட்ரிச் வின்சென்ட் (23). இவர், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த கடந்த 24ம்தேதி சென்னைக்கு வந்துள்ளார். வளசரவாக்கம் தேவிகுப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நடந்து சென்றுள்ளார். மேட்டுக்குப்பம் சாலை ஜெயராம் நகர் பகுதியில் வந்தபோது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 லேப்டாப் மற்றும் 2 பைகளை பறித்து சென்றதாக வளசரவாக்கம் போலீசில் பிரைட்ரிச் வின்சென்ட் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். இதில், ஜெர்மன் நாட்டு வாலிபர் பை ஏதும் கொண்டு வரவில்லை என்பதும், அவரிடம் யாரும் வழிப்பறி செய்யவில்லை என்பதும், போதையில் திருவான்மியூரில் உள்ள ஓட்டல் அறையில் பை, லேப்டாப்களை வைத்துவிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரைட்ரிச் வின்சென்ட்டை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், புகார் அளித்த நபர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது வளசரவாக்கம் போலீசார் 188 டபிள்யூ என்ற பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு நீதிபதிகள் சிறையில் அடைக்க உத்தரவிடுவார்களா? அல்லது ஜெர்மன் தூதரகத்தில் ஒப்படைக்கப்படுவாரா என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லேப்டாப் பறித்ததாக பொய் புகார்; ஜெர்மன் வாலிபர் மீது வழக்குப்பதிவு: கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு appeared first on Dinakaran.

Related Stories: