திருடன் திருடன் என சத்தம் போட்டு துரத்தியதால் குடியிருப்பின் 3வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பரிதாப பலி: முதன்முறையாக திருட முயன்று விபரீதம்; சைதாப்பேட்டையில் நள்ளிரவு பரபரப்பு

சென்னை: குடியிருப்பு ஒன்றில் திருட சென்றபோது திருடன் திருடன் எனக்கூறி வாலிபர்கள் விரட்டியதால், கொள்ளையன் தப்பிக்க 3வது மாடியில் இருந்து குதித்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சைதாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (35). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தனது நண்பர்களுடன் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டின் மூன்றாவது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு நண்பர் ரஞ்சி என்பவருடன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு காற்றுக்காக அறையின் கதவை மோகன்ராஜ் திறந்து வைத்திருந்தார்.

இதற்கிடையே வாலிபர்கள் தங்கியுள்ள அறையில் செல்போன்கள் திருட மர்ம நபர் ஒருவர் அறைக்குள் புகுந்துள்ளார். அப்போது அறையில் சத்தம் கேட்டு திடீரென மோகன்ராஜ் விழித்து பார்த்த போது, அறையில் உள்ள செல்போனை வாலிபர் ஒருவர் எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து திருடன் திருடன் என சத்தம் போட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த செல்போன் திருட வந்த மர்ம நபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் மோகன்ராஜ் நண்பர் ரஞ்சியுடன் சேர்ந்து திருடனை பிடிக்க முயன்றார். அப்போது மர்ம நபர் தன்னை காப்பாற்றிக்கொள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து ஜன்னல் சிலாப்பில் குதித்து தப்பிவிடலாம் என்று நினைத்து குதித்துள்ளார். ஆனால், அவர் 3வது மாடியில் இருந்து சிலாப்பில் அடிபட்டு பிறகு, மரக்கிளை மீது விழுந்து கீழே விழுந்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வாலிபரை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மருத்துவர்கள் பரிந்துரைப்படி மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சைதாப்பேட்டை கோதாமேட்டு குடிசை மாற்று வாரிய குடியிப்பை சேர்ந்த மணிகண்டன் (31) என்றும், இவர் முதல் முறையாக திருட முயற்சி செய்து அதன்படி செல்போன்கள் திருட வந்த இடத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. மர்ம நபர் தன்னை காப்பாற்றிக்கொள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து தப்பிவிடலாம் என்று குதித்துள்ளார்.

The post திருடன் திருடன் என சத்தம் போட்டு துரத்தியதால் குடியிருப்பின் 3வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பரிதாப பலி: முதன்முறையாக திருட முயன்று விபரீதம்; சைதாப்பேட்டையில் நள்ளிரவு பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: