கோபி,பவானி, சத்தியில் ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டன

கோபி,மே26: கோபி தாலுகா அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்றது. கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி முகாம் அலுவலராக கலந்து கொண்டு காசிபாளையம் உள்வட்டத்திற்குட்பட்ட தடப்பள்ளிக்கரை,சிங்கிரிபாளையம், அக்கரைகொடிவேரி, ஒடையாக்கவுண்டன்பாளையம், தடப்பள்ளி கிராமம், சோழமாதேவிக்கரை, அளுக்குளி (அ),(ஆ) கிராமங்கள், போடி சின்னாம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ரேசன்கார்டு, வீட்டுமனை பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு வகையான 91 விண்ணப்பங்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கோபி கோட்டாட்சியர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருவாய் தீர்வாய முகாமில் கோபி தாசில்தார் உத்திரசாமி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சந்திரன்,மண்டல துணை வட்டாட்சியர்கள் விஜய சாமுண்டீஸ்வரி, இலக்கிய செல்வம், தேர்தல் பிரிவு தாசில்தார் பூங்கோதை, வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பவானி: பவானி தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கிய வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 112 மனுக்கள் பெறப்பட்டது. பவானி வட்டாரத்துக்கான ஜமாபந்தி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இலாஹிஜான் தலைமையில் நேற்று தொடங்கியது. பவானி தாசில்தார் தியாகராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் வீரலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதல் நாளான நேற்று படவல்கால்வாய்,சிங்கம்பேட்டை,கேசரிமங்கலம்,கல்பாவி,ஒலகடம்,குறிச்சி, காடப்பநல்லூர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 112 மனுக்களை அளித்தனர். இதில், தகுதியான மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு தீர்வுகளுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திகா, பொன்னுசாமி, முத்துசாமி, ரகுநாத், ஜெயராணி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் தாலுகாவில் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி தலைமையில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. முதல் கட்டமாக சத்தியமங்கலம் உள் வட்டத்தில் உள்ள ராஜன்நகர், புதுப்பீர்கடவு,சிக்கரசம்பாளையம்,பட்டவர்த்தி ஐயம்பாளையம்,மலையடிப்புதூர்,தாசரிபாளையம், கொமரபாளையம், ஆலத்துக்கோம்பை,சதுமுகை,சத்தியமங்கலம்,வரதம்பாளையம்,கோட்டுவீராம்பாளையம்,ரங்கசமுத்திரம்,இக்கரை நெகமம்,அக்கரை நெகமம்,கோணமூலை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மொத்தம் 82 மனுக்கள் பெறப்பட்டு அதில் நான்கு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இதில் இரண்டு பேருக்கு உடனடியாக முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 78 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இன்று பவானிசாகர் உள் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கும், 29ம் தேதி புஞ்சைபுளியம்பட்டி உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 30 தேதி அரசூர் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 31ம் தேதி குத்தியாலத்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோபி,பவானி, சத்தியில் ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: