வீடு புகுந்து மாணவன் மீது கொடூர தாக்குதல்

சேலம், மே 25: சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஸ்வரி (49). இவர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் கூலி தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன் குபேந்திரன் (23) தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை வீட்டிற்கு வந்த உறவினர்கள் 4 பேர் திடீரென மகன்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், குபேந்திரனை இரும்பு ராடால் தாக்கியதில், குபேந்திரனின் மண்டை உடைந்து காயம் அடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனது மகன், உறவுக்கார பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவரை வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்து விட்டனர். இந்நிலையில் அந்த பெண் நிச்சயம் செய்தவரிடம், தனது காதல் குறித்து தெரிவித்ததால் திருமணத்தை நிறுத்திவிட்டனர். அந்த கோபத்தில் வீடு புகுந்து தாக்கி உள்ளனர். திருமணம் நின்றதற்கும், எனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தற்போது அவர்கள் அளித்த புகாரின் பேரில் எனது மூத்த மகனை வாழப்பாடி போலீசார் அழைத்துச் சென்று விட்டனர். எனவே, குபேந்திரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்,’’ என்றார்.

The post வீடு புகுந்து மாணவன் மீது கொடூர தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: