மாணவர்கள் பிடித்தமான கல்வியை கற்க வேண்டும்

கிருஷ்ணகிரி, மே 25: பிளஸ்2 முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்தமான கல்வியை கற்று, வேலை வாய்ப்பு பெற வேண்டும் என, கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு அறிவுறுத்தினார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகத்துடன் இணைந்து நடத்தும், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ‘விழுதுகளை வேர்களாக்க” என்கிற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பேசியதாவது:

12ம் வகுப்பு முடித்த மாணவர்களில், குறைவான மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர். நன்றாக படித்த, தனித்திறமைகள் உள்ள பல மாணவர்கள், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அத்தகைய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் என்னென்ன படிப்புகள் உள்ளன. அதனை படித்த பின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்வியை கற்க வேண்டும்.

மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற வேண்டும். முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் கவலைப்படாமல், தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். இக்காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவது கடுமையாக உள்ளதால் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான திட்டங்கள், தங்களுக்கான தனித்திறமைகளை கண்டறிந்து, அதற்கான படிப்புகளை படிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் (மக்கள் மறுமலர்ச்சி தடம்) சங்கர், கல்வி ஆலோசகர்கள் அமுதவள்ளி, இளையராஜா, தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலத்துறை) கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்கள் பிடித்தமான கல்வியை கற்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: