ஈரோட்டில் பரபரப்பு வடமாநில வாலிபர் எரித்துக்கொலை?

ஈரோடு : ஈரோட்டில் வட மாநில வாலிபர் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு வைராபாளையம் தாசில்தார் தோட்டத்தில் ஹலோ பிளாக் கற்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், நிறுவன வளாகத்தில் குடியிருப்பில் தங்கி வருகின்றனர். இங்கு, சுமைதூக்கும் தொழிலாளியாக அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்த அம்புரோஸ் மகன் நிகில் (23) என்பவர் கடந்த ஒன்றரை மாதமாக வேலை செய்து வந்தார். நிகிலிற்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நிகில் அவரது அறையில் இருந்து நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த சக தொழிலாளர்கள் நிகில் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, நிகில் எரிந்த நிலையில் சடலமாக குப்புற கிடந்தார். நிகிலின் முகம் மற்றும் கால் பகுதியை தவிர மற்ற உடல் பாகங்கள் தீயில் எரிந்து கருகி இருந்தது.இது குறித்து தகவல் அறிந்ததும், ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிகிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். நிகில் உடலிற்கு அருகே பீடி துண்டு, காலி மதுபான பாட்டில் கிடந்தது. இதையடுத்து நிகிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்தனர்.நிகில் மதுபோதையில் தூங்கியபோது அணைக்கப்படாத பீடி தூண்டில் இருந்த தீப்பற்றி இறந்தாரா?, அல்லது தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்தாரா? அல்லது அவரை வேறு யாரேனும் தீ வைத்து எரித்துக்கொலை செய்தனரா? என்பது உள்பட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஈரோட்டில் பரபரப்பு வடமாநில வாலிபர் எரித்துக்கொலை? appeared first on Dinakaran.

Related Stories: