10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார்

சென்னை: நடந்து முடிந்த 10 மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற 21 மாணவ, மாணவியர்களுக்கு, மேயர் பிரியா நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி பரிசுகளை வழங்கினார். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில், 2022-23ம் கல்வியாண்டில் பயின்று 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற புல்லா அவென்யூ, மார்கெட் சாலை, பந்தர் கார்டன், கோயம்பேடு மடுவின்கரை, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கொளத்தூர் ஆகிய சென்னை பள்ளிகளைச் சார்ந்த கீர்த்தனா, பர்ஹானா, திராஜ், விஷ்வா, மணிகண்டன், குமரவேல், தருனா, முத்துலட்சுமி, ஸ்வேதா, ஜெயபிரியா மற்றும் ஹரிஷ் ஆகியோரையும், 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற வேளச்சேரி, புத்தா தெரு, புல்லா அவென்யூ, எம்.எச்.சாலை, விருகம்பாக்கம், சைதாபேட்டை, கொளத்தூர் மற்றும் தரமணி ஆகிய சென்னை பள்ளிகளைச் சார்ந்த சித்ரா, மகேஸ்வரி, ஸ்வேதா, ஹரிணி பிரியா, திவ்யாஸ்ரீ, பெமின்ம்ரா, நேகாஸ்ரீ, ப்ரீத்தி, ஷாருக் மற்றும் மேனகா ஆகியோருக்கு, நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

உயர்க்கல்வி படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி கல்வி பயின்று சிறப்பிடம் பெற்றிட வேண்டும் என்று மாணவர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, 2022-23ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ரங்கராஜபுரம், ஆயிரம் விளக்கு சென்னை உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் அப்பாசாமி தெரு, லாயிட்ஸ் சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மேயர் பிரியா நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) விஸ்வநாதன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர், உதவிக் கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு: மேயர் பிரியா வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: