போச்சம்பள்ளி அருகே 300 ஆண்டு பழமையான இசை, நடன கலைஞர்களுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே இசைக்கலைஞரும், நடன கலைஞரும் சேர்ந்த காணப்படும் அரியவகை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, பண்ணந்தூர் அருகே புளியம்பட்டி ஊராட்சி அரிச்சந்திரன் கோயிலில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். இதில், அரிய வகை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

இக்கோயிலில் இசைக்கலைஞர், நடனக்கலைஞர் இடம்பெற்றுள்ள அரிய வகை நடுகல் உள்ளது. இந்த நடுகல் 300 ஆண்டுக்கு முற்பட்டதாகும். இந்த நடுகல்லில், இசைக்கலைஞர் கையில் சிறிய தப்பட்டை ஒன்றை இசைத்தவாறு உள்ளார். அவர் மேல்சட்டை, கீழே வேட்டியும் அணிந்தும், காதுகளில் பெரிய அளவிலான குண்டலங்கள் காட்டப்பட்டுள்ளன. இவர் இசைக்கும் போது, இவருடைய கால்களும் சிறிது அசைந்து ஆடுவது போல் உள்ளது. இதன் அருகில் உள்ள மற்றொரு ஆண், சேவை ஆட்டம் எனப்படும் குருமன் பழங்குடி மக்களின் நடனத்தை ஆடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் ஆடை, ஆபரணங்கள் உடைகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

நடன கலைஞரின் வலது கையானது, மேல்நோக்கி நடன அசைவுகளை விளக்குவது போலவும், இடது கையானது கீழ் நோக்கி வளைந்து, குட்டை பாவாடை நுனியை இருவிரல்களில் பிடித்து நளினமாக நடனம் ஆடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும், இவர் அணிந்துள்ள உடையானது, கழுத்தில் இருந்து இடுப்பு வரை, தற்கால தெருக்கூத்து கலைஞர்கள் போன்ற ஒரே உடையாக காட்டப்பட்டுள்ளது.

இடது புறம் ஒரு தூண் போன்று காணப்படுகிறது. இந்த நடனமானது ஒரு அரங்கில் நடைபெறுவதாக கொள்ளலாம். பொதுவாக இசை கலைஞருடைய நடுகல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இசை கலைஞர் இசைப்பது போன்றும், நடன கலைஞர் நடனம் ஆடுவது போன்றும் ஒரே கலலில் அமைக்கப்பட்டுள்ள நடுகல் கண்டறிவது இதுவே முதல் முறையாகும். தப்பட்டை மற்றும் சேவை ஆட்டம் போன்றவை குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். இது குருமன்ஸ் இன மக்களுடைய நடுகல் என கூறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post போச்சம்பள்ளி அருகே 300 ஆண்டு பழமையான இசை, நடன கலைஞர்களுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: