ஈரோடு,மே22: பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 17.74 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 727 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
இதில் 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,730க்கும், அதிகபட்சமாக ரூ.2,740க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம், ஒரே விலையாக ரூ.2,670க்கும் விற்பனையானது.இதில், 39ஆயிரத்து 480 கிலோ எடையிலான 658 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. அவற்றின் விற்பனை மதிப்பு ரூ.17 லட்சத்து 74 ஆயிரத்து 170 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
The post பழனி முருகன் கோயிலுக்கு ரூ.17.74 லட்சம் சர்க்கரை கொள்முதல் appeared first on Dinakaran.