சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்; மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர், மே 21: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறமாயின் ₹1,20,000 மிகாமலும் கிராமப்புறமாயின் ₹98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ₹20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ₹30 லட்சத்திற்கு கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ₹10 லட்சத்திற்கு கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ₹1 லட்சம், ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் நபர் ஒருவருக்கு ₹1,50,000 கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்வோர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்-1ன் கீழ் ₹20 லட்சம் வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்தில் ₹30 லட்சம் வரை கல்விக்கடன் உதவி வழங்கப்படுகிறது.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார். கடன் மனுக்களுடன், அவர் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்; மாவட்ட கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: